Spread the love

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி

வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும்

குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்

திண்டிறல் வென்றித் தண்டால் கொந்தன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீகோவிராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜதேவர்

எனத்துவங்கும் சிவபாதசேகரனான ராஜராஜசோழனின் கல்வெட்டு மெய்க்கீர்த்தி, காந்தளூர்ச்சாலை முதல் பாண்டியர் வரை பலநாடுகளை வெற்றி கொண்டு இருபத்தாறாவது ஆட்சியாண்டில் இருபத்தியேழாம் நாள், தஞ்சாவூர் கோயிலுக்குள் “கீழைத்திருமஞ்சன சாலையில் இருந்து, நாம் எடுப்பிச்ச இத்திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாம் குடுத்தவை நம் அக்கன் குடுத்தவை நம் பெண்டுகள் குடுத்தவை மற்றும் குடுத்தார் குடுத்தவைகளை ஸ்ரீவிமானத்திலே கல்லிலே வெட்டுக எனத் திருவாய் மொழிஞ்சருள வெட்டின’

– என 26 -ஆம் ஆட்சியாண்டில் கி.பி, 1010 -இல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறது.

காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது. காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.

கி.பி. 985ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் ராஜராஜ சோழன். இவருடைய தந்தை சுந்தர சோழன் ஆவர். காந்தளூர்ச் சாலைப் போர் ராஜராஜனின் முதல் போராகப் போற்றப்படுகிறது.

பாஸ்கர ரவி வர்மனின் காலகட்டம் கி.பி. 962இலிருந்து கி.பி. 1019வரை. இவருடைய ஆட்சியில் சேர நாடு, குடமலை நாடு, வேணாடு, கொங்கு நாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அதவாது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. மிக நீண்ட ஆட்சிக் காலம் உடைய சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மன். 58 ஆண்டுக் காலம் இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் யூதர்களுக்குச் சமூகத்தில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரமாக இவர் யூதர்களுக்குத் தாமிரப் பட்டயம் அளித்துள்ளார் . இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் சேர நாட்டில் காந்தளூரில் போர்ப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது.

முற்காலச் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பின் உறையூரில் சிற்றரசர்களாகக் குறுகியிருந்த சோழர்கள், விஜயாலய சோழன் காலத்தில் கி.மு. 9ஆம் நூற்றாண்டில்தான் எழுச்சி பெற்றனர். அவர், முத்தரையர்களை வீழ்த்தித் தஞ்சையைக் கைப்பற்றி, தஞ்சைச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தார். இதன் பிறகு பெரும் செல்வாக்குடன் வளர்ந்த சோழ சம்ராஜ்ஜியம் பராந்தகச் சோழன் காலத்தில், ராஷ்டிரகூடர்களுடன் நடந்த தக்கோலம் (அரக்கோணம்) போரில் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது.

இப்போரில் பராந்தகனின் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டார். பராந்தகனின் இறப்புக்குப் பின் அவருடைய இளைய மகன் கண்டராதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கண்டராதித்தன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் பலவீனமடைந்தது.

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. அவர் ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டார். ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். சேர, பாண்டிய, ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர்ச் சாலையின் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி எனச் சொல்லப்படுகிறது.

தொண்டைநாடு, கொங்குநாடு, பாண்டியநாடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய ஒரு வலுவான அரசாக மாறியிருந்த சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலையாகும். நுட்பமான போர்த் தந்திரங்கள், தற்காப்புக் கலைகள், தாக்கும் நுட்பம் ஆகியவை அங்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் இது போன்ற போர்ப் பயிற்சிக் கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர்ச் சாலையில் பயிற்சிபெற்ற வீரர்கள்தான் என்பதால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.

முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்குத் தன் தூதுவரை அனுப்பிப் பேச்சு வார்த்தை நடத்த முயன்றான். ஆனால் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட சோழ நாட்டுத் தூதுவரைச் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மா சிறைபிடித்தார். இதுதான் ராஜராஜன் உடனடியான படையெடுப்புக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

ராஜராஜனுக்கும் பாஸ்கரவர்மனுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்ததது எனவும் சொல்லப்படுகிறது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சேரர்களின் கப்பல்களை வீழ்த்தி வெற்றியடைந்தார்.

‘காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி’ என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பது கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம். இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றி பெற்றான். காந்தளூர்ச் சாலை சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *